நாம் சுயநலவாதிகளா....?

நம் எல்லோருக்கும் வெளியில் சென்று உணவு விடுதிகளில் சாப்பிட்ட அனுபவம் நிச்சயம் இருக்கும்; இந்த ஊரடங்கு நேரத்தில் அது முடியாமல் இருக்கலாம்...! முன்பதிவு இல்லாத உணவு விடுதி என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராதவிதமாக, அன்று கூட்டம் அதிகம் இருக்கிறது. நாம் சிறிது நேரம் பொறுத்திருந்து மேஜை காலியான பிறகே உட்கார முடியும். அப்போது நமது மன ஓட்டம் எப்படி இருக்கும்....? நாம் எந்த மேஜை காலியாவதற்காகக் காத்திருக்கிறோமோ, அதில் சாப்பிடுபவர்களை நினைத்து, ‘இவர்களுக்கு என்ன இங்கிதமே தெரியவில்லை; எவ்வளவு நேரம் சாப்பிடுவார்கள்? மற்றவர்கள் காத்திருக்கிறார்களே என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காமல், ஆற அமர சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; சுயநலவாதிகள்...!’ சரி..., நமக்கு மேஜை கிடைத்து சாப்பிட ஆரம்பித்து விட்டோம். அடுத்து ஒரு குடும்பம் சப்பிட வந்து நமது மேஜை காலியாவதற்காகக் காத்திருக்கிறார்கள். நாம் மெதுவாக சாப்பாட்டை ரசித்துச் சாப்பிடுகிறோம். அந்நேரம் நமது எண்ணம் எப்படி இருக்கும்? ‘இது என்ன, நம்மை நிம்மதியாகச் சாப்பிடக் கூட விடாமல், நம் அருகில் நின்று கொண்டு....! விவஸ்தையே இல்லாத மக்கள்....! 

-- இதுதான் பொதுவாக நாம் நடந்து கொள்ளும் விதம். மற்றவர்களுக்கென்று வரும் போது நமது நடவடிக்கை ஒரு மாதிரியும், நமக்கென்று வரும் போது வேறு மாதிரியும்....

மழைக் காலத்தில் ஏதோ வேலையாக வெளியே செல்கிறோம். நாம் மழையை எதிர்பார்த்து, குடையை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்; தவறி விட்டோம். திடீரென மழை பொழிகிறது; ஒதுங்குவதற்கு இடமில்லை. ‘என்ன, இந்த மழை..., நேரம் காலம் தெரியாமல்’ என்று அலுத்துக் கொள்வோம். தவறு நம் மீதா...., மழை மீதா...? அதுவே நாம் வீடு வந்து சேர்ந்த பின் மழை பெய்தால், ‘நல்ல வேளை; நான் தப்பித்தேன், கடவுளே....!’ நாம் அப்போது, நடைபாதை சிறு வியாபாரிகளைப் பற்றியோ, மழையில் மாட்டிக் கொண்ட மற்றவர்களைப் பற்றியோ நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. இதுதான் யதார்த்தம்.....

தனது பெண் ஒரு பையனைக் காதலித்துத் திருமணம் செய்கிறாள். அந்தப் பையன், தன் மகளை நல்ல விதமாகக் கவனித்துக் கொள்கிறான். மகளை எந்த வேலையையும் செய்ய விடாமல், தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறான். அம்மா, எல்லோரிடமும் சொல்வது, ‘என் மகள் அதிர்ஷ்டசாலி; அவள் கணவன் அவளை ஒரு வேலையும் செய்ய விடுவதில்லை’. தன் மகனுக்குத் திருமணமாகி, தன் மகன் அவனது மனைவியை அதே மாதிரி நடத்தும் போது, அம்மா சொல்கிறாள், ‘என் மகன் அதிர்ஷ்டக்கட்டை; அவன் மனைவி, வீட்டில் ஒரு வேலை செய்வதில்லை. எல்லா வேலைகளையும் என் மகனே செய்கிறான். என்ன துரதிர்ஷ்டம்....!’

விவசாயிக்கு, வருஷத்தில் பருவ மழைக் காலங்களில் மழை அவசியம் தேவை. செங்கல் சூளை வைத்திருப்பவர்க்கும், தீப்பெட்டித் தொழில் செய்பவருக்கும் எந்நேரமும் வெயில் தான் தேவை. இப்படி எத்தனையோ உதாரணங்களைக் கூறலாம். கடவுளுக்குத் தெரியும் எதை, எப்போது, எவ்வளவு, யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பது. அதை நாம் முழுவதுமாக நம்ப வேண்டும்.

சுயநலமாக இருப்பதில் தவறில்லை; ஆனால், அது பொதுநலத்துக்கு ஊறு விளைவிக்குமாயின், மிகவும் தவறு.

(பின் குறிப்பு) : நான் ஏற்கனவே எனது ‘வலைப்பதிவுத் தளத்தில்’ (blog site), "Are we selfish...? Yes, we are..." என்ற தலைப்பில் பதிவேற்றம் (upload) செய்திருந்த வலைப்பதிவை (blog), தமிழாக்கம் செய்து என்னுடைய வலைப்பதிவுத் தளத்தில் பதிவேற்றம் செய்கிறேன். இது நூற்றுக்கு நூறு தமிழ் மொழி பெயர்ப்பு கிடையாது. ஆனாலும், உள்ளடக்கம் (content) அதேதான். உங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?