எதுவுமே நிரந்தரமல்ல.... இந்த தீநுண்மியும் கூட....!

எதுவுமே நிரந்தரமல்ல...., இந்த தீநுண்மியும் (virus) கூட....! நாம் சரித்திரத்தில் படித்து தெரிந்து கொண்டது போல எத்தனையோ ‘சர்வதேச பரவல் நோய்களை’ இந்த உலகம் முன்பே கண்டிருக்கிறது. அவைகளிலிருந்து மீண்டும் வந்திருக்கிறது. எனவே, இந்த COVID-19 தீநுண்மியும் கொஞ்ச நாளில் சரித்திரமாகி விடும். நம்பிக்கைதானே வாழ்க்கை..... நம்புவோம்....

எப்பேர்ப்பட்ட பேரழிவு, இழப்புகளிலிருந்து மீண்டு வர கால அவகாசம் தேவை. அது புண்களை ஆற்றினாலும், ’வடு’ சில காலத்திற்கு இருக்கத்தான் செய்யும். எல்லாத் துன்பங்களுக்கும் ஒரே மருந்து ‘காலம்’ தான். காலம் செல்லச் செல்ல, துன்பம், இழப்பின் வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்; (அவ்வப்போது எட்டிப் பார்க்கவும் செய்யும்....).

அதே மாதிரி, எம்மாதிரி இன்பத்தை நாம் நுகர நேர்ந்தாலும், அதன் விளைவுகளும், வலிமையும் காலப் போக்கில் குறையத்தான் செய்யும். எல்லாமே காலச் சக்கரத்தில் மாறக் கூடியவையாகையால், இன்பத்தைக் கண்டு மிகையாகத் துள்ளாமலும், துன்பத்தைக் கண்டு மிகையாகத் துவளாமலும் இருக்கப் பழக வேண்டும். இன்பமும், துன்பமும் உலகில் உள்ள எல்லோருக்குமே வரும்; இதில் சந்தகமே கிடையாது. ஒவ்வொருவரது இன்பமும் துன்பமும் அளவு மாறலாம். சிலரது துன்பம் நமது கண்ணுக்குத் தெரியாது; அவ்வளவே....!

நமது நெருங்கிய உறவினரது இழப்பு, மிகுந்த வேதனையைத் தரும்; அதுவும் அவர் இறக்கக் கூடாத சிறு வயதிலேயே நடக்கும் போது. ஆனாலும், இது கடவுளின் சித்தம் என்று உணர வேண்டும். அந்த நிகழ்வுக்கான காரணம் கடவுளுக்குத் தெரியும். கடவுளின் செய்கைகளில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். அதற்காக கடவுளை நிந்திப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. கடவுளிடம், அந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள நமக்கு சக்தியையும், மன உறுதியையும் கொடுக்குமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.

’இதைச் சொல்வது எளிது; உங்களுக்கு வந்தால் தான் தெரியும்’ என்று நீங்கள் கூறுவது எனக்குக் கேட்கிறது. நானும் மனிதன் தான்; எல்லோருக்கும் ஏற்படும் இழப்பு எனக்கும் ஏற்படாமலில்லை. ஆனாலும், கடவுள் மீது உள்ள நம்பிக்கையை, அதற்காக நான்  குறைத்துக் கொள்ளவில்லை. அந்த இழப்பு, வாழ்க்கையின் வேறு வேறு பக்கங்களை நமக்குக் காட்டும். அதன்படி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்து எவ்வளவோ இளம் பெண்கள், கணவனை இழந்த பிறகு, மேற்படிப்பு படித்து, வாழ்க்கையின் சிகரத்தையே தொட்டிருக்கிறார்கள். அதற்காக, அவர்கள் அந்த இழப்பை மறந்து விட்டார்கள் என்று அர்த்தமில்லை; அதோடு வாழப் பழகி விட்டார்கள் என்றே அர்த்தம்.

இழப்பையும், சந்தோஷத்தையும் சம நோக்கோடு பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கடவுள் மீது பாரத்தைப் போட்டு, வாழ்க்கையை ஒரே சீராக நடத்த, நம்மைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். எல்லாமே கடந்து போகும்......... வாழ்க, வளமுடன்....

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?