இது ‘இப்படித்தான் நடக்க வேண்டுமென்றிருந்தால்....’

மகாபாரதத்தில், யுதிஷ்டிரன் சூதாடிய நிகழ்ச்சி, பாண்டவர்கள் வாழ்வில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. யுதிஷ்டிரன் என்ற ‘தருமன்’, தர்மம் தெரிந்தவன். சூதாடுவது தவறு என்றும், பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நன்கு அறிந்தவன். இருந்தும், பல முன்னோர்களும், நெருங்கிய உறவினர்களும் அறிவுரை கூறியும் கேட்காமல், சூதாடினான். அவனுக்கு சூதாட்டம் ஆடுவதில் நாட்டம் உண்டென்றாலும், அதில் தேர்ச்சி பெற்றவன் கிடையாது. ‘சகுனி’யை ஒப்பிடும் போது, தருமன் ஒன்றுமே கிடையாது..., சூதாட்டத்தைப் பொருத்த வரையில். அப்படி இருந்தும், எல்லாவற்றையும் இழக்கும் அளவுக்கு சூதாட்டத்தைத் தொடர்ந்து ஆடுவானேன்....? அவனது அறியாமை என்று சொல்ல முடியுமா...? யார் பேச்சையும் கேட்காத ஆணவம் என்று கூறலாமா...? இல்லை, விதியின் விளையாட்டா....? ‘இது இப்படித்தான் நடக்க வேண்டுமென்றிருந்தால், யாராலும் அதை மாற்ற முடியாது’. அதுவே ‘விதி’யின் வலிமை.

‘ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்’ - திருக்குறள் 380 - அதிகாரம் ‘ஊழ்’

இதன் பொருள் : ஊழை விட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன, ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும் - மு. வரதராசனார்.

சீதாப்பிராட்டி, தர்மம் அறியாதவர் அல்ல; அதன் சூட்சுமமும் நன்கு தெரிந்தவர் தான். எனினும், ‘தங்கமான்’ என்ற ஒரு பிறவி உலகில் இருக்காது என்று அறிந்தும், அதைப் பிடித்துத் தரச் சொல்லி ராமபிரானிடம் கெஞ்சுகிறார்.... ஏன்...? இதை விபரீத ஆசை என்பதா...? இல்லை, விதியின் விளையாட்டு என்பதா...? சூழ்நிலையின் உண்மைத் தன்மையைப் புரிந்து, அந்த ‘மாயமான்’ மீது ஆசைப்படாதிருந்தால், ராவணனால், கவர்ந்து செல்லப்பட்டிருப்பாரா...? ’விநாச காலே, விபரீத புத்தி’. ஒரு வேளை, பிராட்டியார் தங்கமான் மீது ஆசைப்படாதிருந்தால், விதி வேறு வழியில் வந்திருக்கலாம்...!

நாம் செய்யும் சில காரியங்களோ அல்லது நாம் சொல்லும் சில சொற்களோ, நமது நடைமுறை வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாததாக இருக்கலாம். அதனால் வரும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். நாம் சாதாரணமாக அப்படிப் பேசியிருக்க மாட்டோம் அல்லது செய்திருக்க மாட்டோம். ஏன் அப்படிச் செய்தோம்...? நாம் என்ன முயன்றிருந்தாலும், மாற்று வழியில் சென்றிருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். இதைத்தான் ‘விதி’ என்கிறோம். நம்மால் விவரிக்க முடியாத செயல்களை நாம் ‘தெய்வச் செயல்’ என்றே கொள்ள வேண்டும். நம் எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு சில சந்தர்ப்பங்களில் இப்படி நடந்தே தீரும். அதன் காரணத்தை கடவுள் ஒருவரே அறிவார்.... 

ஒன்று நமக்குக் கிடைக்க வேண்டும் என்று விதி இருந்தால், யாராலும் அதைத் தடுக்க முடியாது. இன்னொன்று நமக்குக் கிடைக்க விதி இல்லையென்றால், என்ன முயற்சி செய்தாலும், நமக்குக் கிடைக்காது. ”விதியை மதியால் வெல்லலாம்”. அந்த மதியைச் சரியாக வேலை செய்ய வைக்கவும், அந்த விதி துணை செய்ய வேண்டும். விதி வலியது.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?