அந்தக் காலம் Vs இந்தக் காலம் - பகுதி 3

மேகலா : உறவுகளின் அருமையே தெரியாதவர்கள்.... உலக மக்களோடு தொடர்பு கொள்கிறார்கள்.....! 'Phone-ஏ உலகம்’ என்று மணிக்கணக்கில் அதனோடேயே மல்லுக்கட்டுவது மட்டும் சரி என்கிறாயா.... அது மட்டுமல்ல கிருஷ்ணா..., பிள்ளைகள் வெளியில் சென்று விளையாடுவது என்பதே கிடையாது. அந்தக் காலங்களில், சின்னப் பிள்ளைங்க ஓடிப் பிடித்து விளையாடுதல், ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு, கண்ணாமூச்சி விளையாட்டு என்று வீட்டிற்கு வெளியே விளையாடச் செல்வதும், விளையாடும் போது, முகமெல்லாம் வியர்த்தும், உடம்பெல்லாம் அழுக்கேறிப் போவதும், சகஜமான ஒன்று... இன்று சின்னப்புள்ளைகளுக்கு வியர்ப்பது என்பதே கிடையாது..... கல்லிலும், மண்ணிலும் புரண்டு விளையாடுவதை, ‘சின்னப் பிள்ளைகளே வேண்டாம்’, அம்மாமர்களே அனுமதிப்பது கிடையாது. எப்பவும், video games விளையாடணும்.... இல்லையா...., cartoon படம் பார்க்கணும்...., அப்பத்தான் சாப்பாடே சாப்பிடுவார்கள்.... நீ என்னதான் சொல்லு கிருஷ்ணா... சின்னப் பிள்ளைகள் உலகம் கூட, அந்தக் காலம் தான் பொற்காலம்....

கிருஷ்ணர் : ஏன் இப்பவும், பிள்ளைகள் ground-க்குப் போய் கிரிக்கெட் விளையாடுவதில்லையா... அப்பார்ட்மெண்டில் குடியிருப்பவர்களே...., மாலை நேரங்களில் ground-ல் விளையாடுவதையும் நீயும் பார்த்திருக்கிறாயே.... நெருக்கடி நிறைந்த நகரங்களில், பிள்ளைகள் out-door-ல் விளையாடப் போவது முன்பு மாதிரி இல்லையென்றாலும், நேரம் கிடைக்கும் போது, ground-க்குச் சென்று விளையாடத்தான் செய்கிறார்கள்.... Technology வளர்ச்சி பெற்ற இந்தக் காலங்களில், electronics சம்பந்தப்பட்ட அறிவு, சின்னக் குழந்தையிலேயே பெற்று விடுகிறார்கள். நீ சொல்லும் அந்தக் காலங்களில், அதாவது நீ வளரும் காலங்களில், higher classes-க்குப் போகும் வரைக்கும், சின்னப் பிள்ளையாகத்தானே இருந்தாய்... Fast thinking, மாத்தி யோசிப்பது..., இதிலெல்லாம் இந்தக் காலத்துத் தலைமுறையினர் தான் best.....

மேகலா : அறிவு, யோசிக்கிறது என்று நீ சொன்னவுடன் எனக்கு education-ஐப் பற்றிச் சொல்லணும்னு ஞாபகம் வருது கிருஷ்ணா... அந்தக் காலங்களில் எல்லாம்...., ஒரு பாடத்தை சொல்லிக் கொடுத்தால்..., அதன் பிறகு, பரீட்சைக்குத் தயாராக வேண்டியது மாணவனின் பொறுப்பு... இன்னும் சில பாடங்களில்...., கணக்கை எடுத்துக் கொள்வோம்.... கடன் வாங்கிக் கழிக்கும் முறையை சொல்லித் தருகிறார்கள் என்றால், அந்த முறையில் 1 கணக்குதான் சொல்லித் தருவார்கள். அதே கணக்கில் மீதமிருக்கும் கணக்குகளை மாணவர்கள் தான் செய்ய வேண்டும்... அதனால், மாணவர்களுக்கு யோசிக்கும் திறனும், தானே முயற்சி செய்யும் திறனும் உருவாயிற்று. Value education-ல்..., ஆசிரியர் கற்றுத் தராத தலைப்புக்களை பரீட்சையில் கேட்பார்கள். சவாலான தலைப்புக்களைக் கூட மாணவர்கள் சிந்தித்து எழுதும் திறனைப் பெற்றிருந்தார்கள். ஆனால் இன்றோ...., கணக்குப் பாடத்தில் 10 கணக்குகள் கொடுக்கப்பட்டிருந்தால்..., 10 கணக்குகளையும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல், திரும்பத் திரும்ப எழுதச் சொல்லி, குருட்டு மனப்பாடம் செய்ய வைத்து விடுகிறார்கள். கணக்குப் பாடம் மட்டுமல்ல.... எல்லா subjects-ம் இப்படித்தான். இன்றைக்கு, ஆசிரியர் பயிற்சி கொடுக்காத பாடங்களில் மாணவர்களால், சிந்திக்கக் கூட முடியாத நிலைதான் இருக்கிறது.

கிருஷ்ணர் : நீங்கள் சிந்திக்கும் நேரத்தில், இன்றைய மாணவர்கள் விடையே சொல்லி விடுவார்கள்... யார் சொன்னது சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று.... கொஞ்ச நாட்களுக்கு முன்னெல்லாம், T. V. விளம்பரங்களில், ‘இந்தியா, மலேசியா, மற்றும் உலக நாடுகளில் புகழ் பெற்றது கோபால் பற்பொடி’ என்று வருமே..., நீ பார்த்திருக்கிறாயா.... இன்றைய காலங்களில், இப்படி விளம்பரம் பண்ணினால், யாராவது அந்த product-ஐ வாங்குவார்களா.... இன்று, மக்களை மனசளவில் தன் பக்கம் இழுப்பது மட்டுமல்ல...., தன்னுடைய product-ஐ வாங்கச் செய்து, அதைத் தக்க வைப்பதற்காக, புதுப் புது ஐடியாவோட விளம்பரப்படுத்துறாங்களே, இந்த அறிவு இன்றைய கல்வி கொடுத்த சிந்தனை.... அந்தக் காலங்களில் 100 பேர் பரீட்சை எழுதினால், 50 பேர் பாஸ் பண்ணுவாங்க.... இன்று 100% result கொடுக்க எல்லா பள்ளிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும் தயாராக இருக்கிறார்கள். இப்பச் சொல்லு...., கல்வி என்பது நல்லாப் படிக்கிறவங்களுக்கு மட்டுமா...., எல்லோரும் கட்டாயம் படித்து, உயர் கல்வியும் பெற வேண்டும் என்பதில் சிறப்பா.... இன்னும் சொல்லப் போனால், இடை விடாத பயிற்சி கூட ஒரு கட்டத்தில் சிந்தனையில் மாத்தி யோசிக்கும் தன்மையைக் கொடுக்கும்.... நீ என்ன சொன்னாலும், நான், இந்தக் காலக் கல்விதான் சிறந்தது என்று சொல்வேன்.....

மேகலா : ஏன் கிருஷ்ணா.... இன்றைய தலைமுறையினரை சேர்ந்தாப்புல பத்து வரிகளை எழுதச் சொல்லு பார்க்கலாம்.... இவங்களுக்குன்னு ஒரு short form வச்சிருக்காங்க... ‘You'-ன்னு எழுத மாட்டங்க..., ‘U'- அப்படீன்னுதான் எழுதுவாங்க.... இப்படியே எழுதி எழுதி உண்மையான spelling-கே மறந்து போயிருச்சி... ஒரு game-ல, விடுகதையாக..., ‘வெந்து கெட்டது ________, வேகாது கெட்டது_____’ என்ற பழமொழியை fill-in the blanks-ஐ நிரப்பு என்றால், இந்தக் கால அறிவாளிகளுக்கு, வெந்து கெட்டது ’முருங்கை’, வேகாது கெட்டது ’அகத்தி’ என்று தெரியவில்லை கிருஷ்ணா... அது சரி...., முருங்கைக்கீரை, அகத்திக்கீரையின் மகத்துவமே இவங்களுக்குத் தெரியாது..., பிறகு எப்படி பழமொழியை அறிவது.... அன்றாட வாழ்க்கையில், பெரியவர்கள் சொல்லும் பழமொழியையும், அனுபவங்களையும் உன்னிப்பாகக் கேட்பவர்களுக்கு மட்டும் தான் கிருஷ்ணா..., நம்மைச் சுற்றியிருக்கும் விஷயங்களில் அறிவு வளரும்.... அது, அந்தக் காலத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் இயல்பாக வரும்....

கிருஷ்ணர் : ஓஹ்ஹோ.... ஒரு வார்த்தைக்கு spelling தெரியவில்லையென்றால், சுற்றி நடக்கும் விஷயங்களில் கொஞ்சம் கூட அறிவு இல்லாது போயிருமா.... Correct-ஆன spelling வேண்டுமென்றால், google-ஐ search பண்ணிப் பார்க்கிறோம்; தெரிஞ்சிக்கிறோம். அதுக்கு எதுக்கு கீரைகளின் மகத்துவம் தெரியாது என்கிறாய். இன்றைய தலைமுறையினருக்கு, எந்தக் காய்கறியில் ‘கால்சியம்’ இருக்கிறது..., எது carbohydrate, எது புரோட்டீன்...., எந்த உணவை salad-ஆகச் சாப்பிடணும், எதை வேக வைத்துச் சாப்பிடணும், எந்தக் கீரை சாப்பிட்டால் உடல் இளைக்கும் என்றெல்லாம் கற்றுக் கொடுக்க எத்தனை channel இருக்கிறது... இன்று technology கற்றுக் கொடுக்கும் அறிவு கடலளவு... உனக்குத்தான் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீ தான் பிடிவாதமாக அந்தக் காலத்தை உயர்த்திப் பேசுகிறாய்....

(தொடரும்)

குறிப்பு : இந்தத் தொடர், எனது மனைவி திருமதி மணிமேகலை அவர்களது படைப்பு. அவரது படைப்பு அனைத்தும் பகவான் கிருஷ்ணருடன் உரையாடுவது போலவே அமைந்திருக்கும்.

Comments

Popular posts from this blog

மனம் மிக அலை பாயுதே....

Mental Ability..... are we slowly losing....?

Is it humanly possible....?